பதிவு செய்த நாள்
17
மே
2024
05:05
வாழப்பாடி; வாழப்பாடியில் உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய முறைப்படி காளையை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று பொது மக்களிடம் வரி வசூல் செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி, அக்ரஹாரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயில் தேர் திருவிழா வரும் ஜூன் 8ல் நடைபெறுகிறது. இதுகுறித்து தண்டோரா போடப்பட்டு,பொது மக்களுக்கு அறிவிப்பதற்கும், திருவிழா நடத்தும் செலவிற்கு நன்கொடை வசூலிப்பதற்கும், இன்று பாரம்பரிய முறைப்படி கோயில் காளையை அலங்கரித்து, வாழப்பாடி குடியிருப்பு பகுதிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று, வரி வசூல் செய்தனர். அப்போது, அலங்கரித்து அழைத்து வரப்படும் கோயில் காளைக்கு, பழங்கள், தீவனம், பிரசாதம் கொடுத்து, காளையை வணங்கி வழிபட்டு, தேர் திருவிழாவிற்கு மக்கள் நன்கொடை வழங்கினர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறியதாவது: வாழப்பாடி, அக்ரஹாரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்ராய பெருமாள் கோயில் தேர் திருவிழா வருடம் தோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு வரும் ஜூன் 8ல் தேர் திருவிழா நடத்தப்பட உள்ளது. இதை மக்களுக்கு தெரிவிப்பதற்கும், தேர்திருவிழா செலவிற்கு நன்கொடை வசூலிப்பதற்கும், தண்டோரா போட்டு முன்னோர் வழியில், கோயில் காளைகளை அலங்கரித்து, மேள வாத்தியம் முழங்க குடியிருப்பு பகுதிகளுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வதை பாரம்பரியமாக பின்பற்றி வருகிறோம். ஊர்லமாக அழைத்துச் செல்லும் கோயில் காளைக்கு பழங்கள், தீவனம், பிரசாதம் கொடுத்து மக்கள் வணங்கி வழிபட்டு வருகின்றனர் என்றார்.