பதிவு செய்த நாள்
22
மே
2024
01:05
நத்தம், நத்தம் அருகே பட்டணம்பட்டியில் பெரியகருப்பு, சின்னக்கருப்பு, சக்தி ஏழு கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் நேற்று முன்தினம் ஊராளிபட்டி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஊர் மந்தையில் கண் திறக்கப்பட்டு கோவிலுக்குள் சென்றது.பின்னர் அங்கு பெரியகருப்பு, சின்னக்கருப்பு, சக்தி ஏழு கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, முளைப்பாரி, மாவிளக்கு,கிடாய் வெட்டுதல் , அங்கப்பிரதட்சணம் எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பின்னர் நேற்று மாலையில் வர்ணகுடைகள்,தீவட்டி பரிவாரங்களுடன் வானவேடிக்கை களோடு சுவாமிகள் ஊர்வலமாக சென்று பட்டணம்பட்டி மலை அடிவாரத்தில் இருப்பிடம் போய் சேர்ந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பட்டணம்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.