பதிவு செய்த நாள்
22
மே
2024
05:05
திருப்பூர்; வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவின், ஐந்தாம் நாளான நேற்று, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, வெகுவிமரிசையாக நடந்தது. நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று, காலை, ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், சிறப்பு அலங்காரத்துடன், காலையில் திருவீதியுலா சென்று அருள்பாலித்தனர்.
தொடர்ந்து, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், விசாலாட்சியம்மன், சோமாஸ்கந்தர் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், காமதேனு வாகனத்தில் விசாலாட்சியம்மன், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். கோவில் முன், 63 நாயன்மார்களுக்கு, பஞ்சமூர்த்திகள் காட்சி அளித்தனர். தொடர்ந்து, 63 நாயன்மார்கள் எதிர்சேவையுடன், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, சிவனடியார்களின் கைலாய வாத்திய இசையுடன், சாம்பிராணி சேவையுடன் கோலாகலமாக நடந்தது. விழா ஏற்பாடுகளை, குலாலர் சமுதாய மக்கள் மற்றும் கொங்கு குலால சமூக அறக்கட்டளையினர் செய்திருந்தனர். பெருமாள் கோவிலில், மாத ஏகாதசி கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், பாண்டியன் கொண்டை அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
63 நாயன்மார் வழிபாடு
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு சிறப்பு பாலாபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. வைகாசி விசாகத்தேர்த்திருவிழாவில், ஐந்தாம் நாளான நேற்று, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், அறுபத்து மூவர் வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள, அறுபத்து மூன்று நாயன்மார்கள், விநாயகர், சிவலிங்கம் மற்றும் விசாலாட்சியம்மனுக்கு பாலாபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. சிவனடியார்கள், தேவாரம், திருவாசகம் மற்றும் திருத்தொண்டத்தொகை பதிகங்களை பாராயணம் செய்து, மகாதீபாராதனை செய்து வழிபட்டனர்.
திருக்கல்யாண உற்சவம்: இன்று, சுவாமி திருக்கல்யாண உற்சவ விழாவும், வெள்ளை வாகன ஊர்வலமும், அம்மன் பல்லக்கு சேவையும், நம்பெருமாளின் அனுமன் வாகன சேவையும் நடைபெற உள்ளது. நாளை அதிகாலை, சிறப்பு அபிேஷக மற்றும் அலங்கார பூஜைகளை தொடர்ந்து, உற்சவமூர்த்திகள் தேரில் எழுந்தருளுகின்றனர். மாலை, 5:00 மணிக்கு, விஸ்வேஸ்வர சுவாமி, தாமரை மலர்களை ஏந்திய பாலமுருகனை இடையே வைத்து, பிரியாவிடையுடன் வீற்றிருக்கும், சோமாஸ்கந்தர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. வரும் 24 ம் தேதி, பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்க உள்ளது. நாளை, விஸ்வேஸ்வரர் தேரோட்ட நிகழ்ச்சியும், நாளை மறுநாள் வீரராகவர் தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டம் முன்னிலையில், அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு, பவானி, கரூர், திருச்செங்கோடு, திண்டுக்கல், சுசீந்திரம், கன்னியாகுமரி உட்பட பல பகுதிகளிலுள்ள சிவனடியார்களின், திருக்கயிலாய வாத்தியம் மற்றும் பெண் சிவனடியார்கள் சார்பில் கும்மியாட்டம் நடைபெறும். ஓதுவார் தியாகராஜனின் திருமுறை பன்னிசை பாராயணமும், திண்டுக்கல் சந்தோஷ் குழுவினரின் டோலக் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. திருப்பூர் அர்த்தஜாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், வெண்ணந்துார், ஆத்துார், தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிவனடியார்களின் கயிலாய வாத்திய இசை நிகழ்ச்சியும், மாணிக்கவாசகர் திருக்கூட்டத்தின் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.