பதிவு செய்த நாள்
22
மே
2024
08:05
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.
வடபழநி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் வாகன புறப்பாடு விமர்சையாக நடந்தது. வைகாசி விசாகமான, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பள்ளியறை பூஜைகள் நடந்தது. பின், சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து காப்பு களைதல் நிகழ்வும் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதி உலா நடந்தது. தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பின், யாகசாலை பூஜைகள் துவங்கி மகா பூர்ணாஹுதி, கடப்புறப்பாடு, சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. இதில், சீர்வரிசை தட்டு வைத்து, யஜமான சங்கல்ப நிகழ்வு நடந்தது. கோவில் தக்கார் இல.ஆதிமூலம், துணைக்கமிஷனர் ஹரிஹரன் ஆகியோருக்கு சங்கல்பம் செய்யப்பட்டது. பின், கலச பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு பூணுால் மாற்றி, காப்பு கட்டும் வைபவம் நடந்தது. யாகசாலை வளர்த்து ஹோமங்கள் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மாலை மாற்றுதல், பாலும், பழமும் வழங்கும் நிகழ்வு நடந்தது. பின், திருமாங்கல்ய பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் கோவில் அன்னதானக் கூடத்தில், பக்தர்களுக்கு வடை, பாயசத்துடன் கல்யாண விருந்து வழங்கப்பட்டது.