விராலிமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2024 09:05
புதுக்கோட்டை; விராலிமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்ரமணியசுவாமி கோவில், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும்.
இங்கு அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்து அஷ்டமா சித்தி வழங்கி, திருப்புகழ் பாடச்செய்த தலமாக விளங்கி வருகிறது. மலைமேல் உள்ள சுப்ரமணியசுவாமி ஆறு முகங்களுடன், வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா, கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கமாகும். இந்த ஆண்டு வைகாசி விவசாக திருவிழா முன்னிட்டு கடந்த14ம் தேதி சுப்ரமணியசுவாமி வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக தீபாரதனையுடன் வேலுடன் சேவல் மயில் கொடி ஏற்றி வைத்து ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. பின்னர், நேற்று காலை 10.00 மணியளவில் விநாயகர் சிறிய தேரிலும், சுப்ரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரிலும் எழுந்தருளினார். அப்போது, பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்து, நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுடன், பொதுமக்கள் செய்திருந்தனர்.