பதிவு செய்த நாள்
23
மே
2024
09:05
கர்நாடக மாநிலம், சிருங்கேரி ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள் சன்யாசம் மேற்கொண்டு, 50 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது. இதை முன்னிட்டு, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில், நடப்பு ஆண்டு முழுவதும், ‘சுவர்ண பாரதீ’ என்ற பெயரில் உற்சவம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், கடந்த, 19ம் தேதி, ‘ஜகத்குரு நாதாபி வந்தனம்’ என்ற தலைப்பில், 60 இசைக்கலைஞர்கள் பங்கேற்ற சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதீ தீர்த்த சுவாமிகள் முன்னிலையில், காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள், ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், தன் குரு பெயரில் இயற்றிய குரு வர்ய தஸ ஸ்லோகங்கள் இசைக்கப்பட்டன. ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் முன்னிலையில் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதி சங்கரர் மற்றும் சிருங்கேரி ஆச்சார்யார்கள் எழுதிய கீர்த்தனைகள் இசைக்கப்பட்டன. ருத்ர பட்டிணம் சகோதரர்கள், வாகீஷ், சிருங்கேரி சகோதரிகள், நவநீதகிருஷ்ணன், தியாகப்ரம்ம கைங்கர்ய டிரஸ்ட் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். ஸ்ரீ மடத்தின் முதன்மை நிர்வாகி முரளி, இசைக்கலைஞர்களை பாராட்டி, நினைவுப்பரிசு வழங்கினார். – நமது நிருபர் –