பதிவு செய்த நாள்
23
மே
2024
12:05
ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி ஆறுமுக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் வள்ளி, தேவசேனா சமேத சண்முக பெருமான் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முருகர் பிறந்த தினமான பவுர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதையொட்டி கோவிலில் உள்ள விநாயகர், முருகன், மூலவர் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் முத்தாம்பிகை அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தேவசேனா சமேத சண்முக பெருமான் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான விசேஷ பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு வெள்ளி கிரீடம், வேல், சேவல்கொடி சாற்றப்பட்டு, பல வண்ண மலர்களால் அலங்கரித்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுவாமி சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.