திருச்செந்துார் கோவில் கலசம் புதுப்பிக்கும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2024 03:06
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு ஆகும். இந்தக் கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் 200 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அறநிலையத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகளும் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவில் ராஜகோபுரம் திருப்பணிக்கான பாலாலயம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. இதனையடுத்து 16 கோடி ரூபாய் மதிப்பில் ராஜகோபுர திருப்பணிகள் துவங்கி நடந்து வருகிறது. 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ராஜகோபுரத்தின் 9 கலசங்கள் ஆகம விதிப்படி பூஜை செய்யப்பட்டு தனியாக பிரித்து கழற்றி, கீழே கொண்டுவரப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் துவங்கியது. கோபுர கலசத்திற்குள் இருந்த மருந்து பொருட்கள் வரகு, நவமணிகள் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருந்தது கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இப்பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.