பதிவு செய்த நாள்
28
ஜூன்
2024
03:06
திருப்பூர்; ‘‘பாகவதம் கேட்பது என்பது பகவானை வணங்குவதற்கு ஈடானது’’ என, ஆன்மிகப் பேச்சாளர் ஸ்ரீ பாலாஜி பாகவதர் பேசினார். திருப்பூர், காலேஜ் ரோடு அய்யப்பன் கோவிலில், ஸ்ரீ அய்யப்ப பக்த ஜனசங்கம், ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் ஆகியன சார்பில், ஸ்ரீமத் பாகவத ஸப்தாக மகோத்ஸவம் நடக்கிறது. வரும் ஜூலை 2 வரை தினமும் மாலை 6:45 முதல் 8:45 மணி வரை இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஸ்ரீ பாலாஜி பாகவதர், ஸ்ரீமத் பாகவத சப்தாஹ புராணம் தொடர் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
குடிசைவாசியிடம் கேள்வி; முதல் நாளில் அவர் பேசியதாவது: ஒரு காலத்தில், ஒருவர் காசி யாத்திரை மேற்கொண்டார். காசியை நெருங்கியபோது, ஒரு குடிசையைக் கண்டார். அங்கிருந்தவரிடம் ‘கங்கைக்கு எவ்வளவு துாரம்?’ என்று கேட்ட போது, ‘கங்கை என்றாலே என்ன என்று தெரியாது’ எனக் கூறினார். ‘தீர்த்தக்கரைப் பாவியாக இருக்கிறாரே’ என்று எண்ணினார், காசி யாத்ரீகர். அடுத்த நாள் தன் பயணத்தை தொடர்ந்த போது, அடியார் பலரும் ஆற்றில் நீராடி விட்டு வருவதைக் கண்டு, ‘கங்கை எங்கே?’ என்று கேட்டார். ‘இங்கே பாய்ந்து செல்லும் கங்கையைத் தெரியவில்லையா?’ என்று அவர்கள் கேட்டுச் சென்றனர்.
மன்னிப்புக் கேட்ட யாத்ரீகர்; அன்று இரவு மீண்டும் அந்த குடிசை வாசலில் அவர் ஓய்வெடுத்த போது, ஏழு கன்னிகள் அங்கு வந்து குடிசையை சுத்தம் செய்து விட்டு, அழகிய உருவமாக வெளியேறினர். அவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்கள் யார் என அவர் வினவிய போது, ‘யார் கண்ணுக்கும் தெரியாத சப்த புனித நதிகள் நாங்கள். உங்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்து விட்டோம்’ என்று, குடிசையில் உள்ளவர் குறித்து கூறினர். ‘தீர்த்தக்கரைப் பாவி என்று அவரை எண்ணி விட்டோமே’ என்று, அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவரோ நான் பெரிய கைங்கரியம் எதுவும் செய்யவில்லை. என் தந்தை என்னிடம் ஒரு பாகவதத்தை கொடுத்து இதை தினமும் வணங்க வேண்டும் என்றார்; அதை மட்டும் தான் செய்கிறேன் என்று கூறினார்.பாகவதம் கேட்பது அதைப் படிப்பது என்பது பகவானை வணங்கு வதற்கு ஈடானது. இவ்வாறு, அவர் பேசினார்.