பதிவு செய்த நாள்
04
ஜூலை
2024
01:07
மஞ்சூர்; கீழ்குந்தா கிராமத்தில் தெவ்வப்பா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மஞ்சூர் அருகே கிழ்குந்தா கிராமத்தில் காடெ ஹெத்தையம்மன் கோவில் உள்ளது. துானேரி, மட்டக்கண்டி, பாக்கோரை, மஞ்சூர்ஹட்டி, கரியமலை உள்ளிட்ட,14 ஊர் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும் தெவ்வப்பா திருவிழா கொண்டாடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு பிரிவாக பிரிந்தனர். வருவாய்த்துறை வழிகாட்டுதல் படி, விழா நடந்து வந்தது. தெவ்வப்பா என்னும் அறுவடை திருவிழாவில் தான் உள்ளூர், வெளிமாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் படுகரின மக்கள் இங்கு வந்து விழாவில் பங்கேற்று சிறப்பித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக விழா நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது. மக்கள் மிகுந்த வேதனையில் இருந்தனர்.
ஒன்றிணைந்தகிராம மக்கள்; கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தானாக முன் வந்து ஒவ்வொருவரின் கருத்து வேறுபாட்டை களைந்து ஒன்று சேர்ந்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். ‘தெவ்வப்பா’ திருவிழாவை விமரிசையாக கொண்டாட வேண்டும், என, தீர்மானித்தனர். அதன்படி, ‘தெவ்வப்பா’ திருவிழா கீழ்குந்தா கிராமத்தில் நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையை தொடர்ந்து, காடெ ஹெத்தையம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி, பனகுடி மற்றும் ஹெத்தையம்மன் கோவிலில் நடந்த காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் திரளான படுகரின மக்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தினர். பாரம்பரிய உடையில் நடனமாடி மகிழ்ந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அரி கட்டுதல் ( அறுவடை திருவிழா) 3:00 மணிக்கு நடந்தது. இதில், திரளான படுகரின மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர், அன்னதான நிகழ்ச்சி நடந்தது.