பதிவு செய்த நாள்
04
ஜூலை
2024
03:07
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மஹா ரதத்தின் உறுதி தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும், 10 நாட்கள் கார்த்திகை தீப திருவிழாவின்போது, 7 ம் நாள் விழாவில், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கும். இதில், 31 அடி உயர ரதத்தில் விநாயகர்; 31 அடி உயர ரதத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர்; 59 அடி உயரம், 200 டன் எடை கொண்ட மஹா ரதத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர்; 46 அடி உயர ரதத்தில் பராசக்தி அம்மன் மற்றும், 26 அடி உயர ரதத்தில் சண்டிகேஸ்வரர் சுவாமி ஆகியோர் தனித்தனியாக வீதி உலா வருவர். இந்நிலையில், மஹா ரதத்தில் உறுதி தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் எழுப்பிய புகார் படி, நேற்று அறநிலையத்துறை மண்டல ஸ்பதி கண்ணன், கோவில் இணை ஆணையர் ஜோதி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தேரின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, வரும் கார்த்திகை தீப திருவிழாவிற்குள், தேரை பழுது பார்த்து புதுப்பிக்க முடிவு செய்துள்ளனர்.