ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சக்கரத்தாழ்வார் ஜேஷ்டாபிஷேகம்; வெள்ளி குடத்தில் புனித நீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2024 12:07
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் ஆன திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கியமானது ஜேஷ்டாபிஷேகம் ஆகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஸ்ரீநம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 21ம் தேதியும், ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் 28ம் தேதியும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று சக்கரத்தாழ்வார் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, இன்று காலை வடகாவிரி(கொள்ளிடம்) நதியில் இருந்து 11 வெள்ளி குடத்தில் மேள, தாளங்கள் முழங்க யானை மீது வைத்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், திருவானைக்காவல் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் இன்று ஜேஷ்டாபிஷேகம் நடை பெற்றது.