பதிவு செய்த நாள்
08
ஜூலை
2024
10:07
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாமுண்டி சிலையை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே பரளச்சி சோலாண்டி கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர்கள் ரமேஷ், ஸ்ரீதர், பேராசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு, இந்த ஊரைச் சேர்ந்த ஞானதேசிகன், பாலசுப்பிரமணிய பிரபு ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக தகவல் கொடுத்தனர். ஆய்வாளர்கள் அங்கு சென்று ஆய்வு செய்த போது 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாமுண்டி சிற்பம் என தெரிந்தது. இது குறித்து அவர்கள் கூறியதாவது: சாமுண்டி சப்த மாதர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் ருத்ரனின் அம்சமாவார். நாங்கள் கண்டறிந்த சிலை 3 அடி உயரமும், 4 கரங்களும் உடையது. நான்கு கரங்களில் முறையே சூலம், உடுக்கை, கபாலம், பாம்பு இடம்பெற்றுள்ளது. மார்பில் கபால மாலையும், மேலாடை இன்றியும் கீழாடை மட்டும் அணிந்து ஒரு காலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்டு சுகாசன கோலத்தில் அமர்ந்த நிலையில் உள்ளது. தலைப்பகுதி கிரீடம் தரித்தும், பின்புறம் தீ ஜுவாலை காணப்படுகிறது. சிலை வடிவமைப்பை பார்க்கும் போது 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிற்கால பாண்டிய காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம், என்றனர்.