பதிவு செய்த நாள்
08
ஜூலை
2024
10:07
புதுச்சேரி: பட்டானுாரில் உள்ள புரி ஜெகநாதர் கோவிலில் தேர் திரும்பும் திருவிழா நடந்தது.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி டோல்கேட் அருகே நவயுகா நகரில் புரி ஜெகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதுச்சேரி உட்கல் சமாஜ் சார்பில், தேர் திரும்பும் திருவிழா நேற்று நடந்தது. ஜெகநாதர், சகோதரர் பாலபத்ரா, சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன், குண்டிச்சா கோவிலில் இருந்து நிரந்தர வசிப்பிடமான ஜெகநாதர் கோவிலுக்கு திரும்புவதை குறிக்கும் வகையில் விழா நடத்தப்பட்டது. புதுச்சேரி உட்கல் சமாஜ் சுபாஷ் சந்திர பரிஜாவின் தேர் துடைத்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தாகூர் கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ் மேற்பார்வையில், ரதம் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. சக்ரதாரா பெகெரா, பிரதீப் குமார் டே, அஞ்சலி தாஸ், புருேஷாத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் வசிக்கும் ஒடிசா மக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.