பதிவு செய்த நாள்
08
ஜூலை
2024
11:07
ராணிப்பேட்டை ; வாலாஜா நகரத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் திருக்கோவிலில் அக்னி வசந்த விழாவையொட்டி வீர வன்னியர்கள் வம்சம் சார்பில் 18-ஆம் போர் நிகழ்வையொட்டி பொதுமக்களுக்கு மாபெரும் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே மிகவும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ த்ரௌபதி அம்மன் திருக்கோவிலில் 136-ஆம் ஆண்டு மகாபாரத அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக கொண்டாடப்படும் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே ஏற்படும் 18-ஆம் போர் நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த ஆண்டு நாடக கலைஞர்கள் மூலமாக தத்துரூபமாக நடித்து காட்டப்பட்டது. கோவில் கருவறையில் உள்ள திரௌபதி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், தேன், கதம்பொடி, அரிசிபொடி,பழவகைகள் சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கூடியிருந்த 300-க்கும் மேற்பட்ட காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மாபெரும் அறுசுவை அன்னதானத்தை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.