புதுச்சேரி; புதுச்சேரி, லாஸ்பேட்டையில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் திருமஞ்சனம், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. தொடர்ந்து, நேற்று முன்தினம் (10ம் தேதி) இரவு திரவுபதியம்மன், அர்ஜுனன் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின், நேற்று (11ம் தேதி) இரவு அம்மன் குதிரை வாகனத்திலும், அர்ஜுனனுக்கு கிருஷ்ண பகவான் சாரதியாக அமையப்பெற்ற பார்த்தசாரதி ரதத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. இதில், பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வாக இன்று (12ம் தேதி) காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12:00 மணிக்கு படுகளம் நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.