பதிவு செய்த நாள்
29
ஜூலை
2024
05:07
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகையொட்டி ஏராளமான பக்தர்களுக்கு வந்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் இன்று ஆடி கிருத்திகை விழா வெகு சிறப்பாக நடந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆடி மாத கிருத்திகையை ஒட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள கோவிலுக்கு மலை பாதையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை இன்றும், நாளையும் தொடரும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். பக்தர்கள் கோவில் பஸ் மூலமும், படிக்கட்டு பாதை மூலமும் மலைமேல் உள்ள கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று ஏராளமான பக்தர்கள் மருதமலையில் குவிந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.