பதிவு செய்த நாள்
16
ஆக
2024
05:08
காளஹஸ்தி; காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் (வெள்ளிக்கிழமை) இன்று வரலட்சுமி விரத பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக இதற்கான பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கோயில் செயல் அலுவலர் மூர்த்தி தலைமையில் தேவஸ்தான அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர் . கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு (சிராவன லட்சுமி) வரலட்சுமி விரதப் பூஜையை சிறப்பாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த விரதப் பூஜை எவ்வித சிரமமும் இல்லாமல் பக்தி சிரத்தையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கடந்த ஆண்டுகளில் சிவன் கோயில் துணை கோயிலான பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில் வளாகத்தில் ஆண்டுதோறும் (கூட்டு) வரலட்சுமி விரதம் நடைபெற்று வந்தது . ஆனால் தற்போது பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயில் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால், இந்தாண்டு சிவன் கோவில் அருகே உள்ள பிரம்மக் கோயில் வளாகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டதாக கோயில் செயல் அலுவலர் மூர்த்தி தெரிவித்தார். கடந்த காலத்தில் காஞ்சி காமகோடி மடாதிபதிகள் இப்பகுதியை புனிதப் படுத்துவதற்காக இங்கு பலமுறை சதுர்மாச விரதங்களை மேற்கொண்டனர்.
பிரம்ம கோயிலில் வரலக்ஷ்மி விரதப் பூஜையில் ஈடுபட்டவர்களுக்கு கோயிலில் ஞானப்பிரசுனாம்பிகை அம்மனை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஸ்ரீ காளஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர் சுதிர் ரெட்டி உத்தரவின் பேரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 5 ஆயிரம் பெண் பக்தர்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் பூஜைகள் தொடங்கி மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. மேலும் பெண் பக்தர்கள் காத்திருக்க பிரத்யேக நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த விரதப் பூஜையில் ஈடுபட்டவர்களுக்கு தாம்பூலம் ( மஞ்சள் , குங்குமம் வெற்றிலை, பாக்கு, வளையல்கள், பூ , பழம்) கோயில் சார்பில் வழங்கப்பட்டன.