நாகையில் தங்கமீன் விடும் திருவிழா கோலாகலம்; தங்கமீன் விட்ட மீனவர்கள். நடுகடலில் சிவனடியார்கள் பத்தி பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2024 10:09
நாகை; நாகையில் தங்கமீன் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிவபெருமானுக்காக, தங்கமீனை மீனவர்கள் கடலில் விட்டனர்.
63 நாயன்மார்களில் நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ குலத்தில் பிறந்த அதிபக்தநாயன்மார் சிவபெருமானிடம் பக்தி கொண்டு முதல் மீனை சுவாமிக்காக கடலில் விடுவது வழக்கம். இவரது பக்தியை சோதித்த சிவபெருமான் தங்க மீன் ஒன்றை வலையில் கிடைக்கும்படி செய்தார். அதிபக்தநாயனார் அம்மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார். அதிபக்த நாயனாமாரின் பக்தியை கண்டு இறைவன் அவருக்கு காட்சியளித்தார். அதிபக்தநாயனாரின் தெய்வ பக்தியை மெச்சிக்கும் திருவிழா நாகப்பட்டினம்,நம்பியார்நகரில் நேற்று நடைபெற்றது. முன்னதாக புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் இருந்து பூஜிக்கப்பட்ட தங்கமீன் மற்றும் அதிபக்த நாயனாரின் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது சிவனடியார்கள் பம்பை மேளம் முழங்க பத்தி பரவசத்துடன் தாண்டவ நடனமாடினர்.அதனை தொடர்ந்து தங்கமீனுடன் படகில் நடுகடலுக்கு சென்ற மீனவர்கள் சிவபெருமானுக்காக கடலில் தங்க மீனை விட்டு எடுத்தனர். தங்கமீன் விடும் திருவிழாவில், சிவனடியார்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு அதிபக்த நாயனாரை வேண்டிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.