பதிவு செய்த நாள்
02
செப்
2024
10:09
பல்லடம்; பல்லடம் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டல பூஜை விழா நேற்று துவங்கியது. பல்லடம் கடைவீதி, சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் ஆக., 30 அன்று நான்கு கால வேள்வி வழிபாடுகளுடன் விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுவது வழக்கம். இதன்படி, 24 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜையாக இங்கு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, முதல் நாள் மண்டல பூஜை நிகழ்ச்சி நேற்று துவங்கியது. தேன், பால், தயிர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், ஐயப்பனுக்கு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, சிறப்பு முத்தங்கி அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், ஐயப்ப பக்தர்கள் குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.