பதிவு செய்த நாள்
11
செப்
2024
03:09
சபரிமலை; ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜை களுக்காக சபரிமலை நடை 13ம் தேதி திறக்கிறது. 21 வரை எட்டு நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.
திருவோணப் பண்டிகையும், புரட்டாசி மாத பூஜையும் சேர்ந்து வருவதால் சபரிமலை நடை இந்த மாதம் எட்டு நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும். 13ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 14 அதிகாலை 5:00க்கு நடை திறந்ததும் தந்திரி பிரம்மதத்தன் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்து நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் திருவோண சிறப்பு பூஜைகளும் தொடங்கும். 15ல் ஐயப்பன் விக்ரகத்தில் ஓணக் கோடி என்று அழைக்கப்படும் மஞ்சள் நிற வஸ்திரம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். 14, 15, 16, தேதிகளில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு மதியம் ஓணவிருந்து வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக புரட்டாசி மாத பூஜைகளும் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மதியம் களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் இரவு அத்தாழ பூஜை நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு பிரசித்தி பெற்ற படி பூஜை நடைபெறும். 22 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர் கேரளா அரசு போக்குவரத்து கழகம் பம்பைக்கு சிறப்பு பஸ்களை இயக்குகிறது.