நத்தத்தின் காவல் தெய்வமாக விளங்கும் அரண்மனை சந்தனக்கருப்பு சுவாமிக்கு புதிதாக கல்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி முதல்நாள் அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் முன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் நேற்று காலையில் நான்காம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம்,கங்கை, காவேரி,கரந்தமலை அழகர்மலை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த புனித தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான கற்பக விநாயகர், வழிவிடும் விநாயகர், சுப்பிரமணியர், நாகம்மாள், சப்த கன்னிகள் சுவாமி கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து புனித தீர்த்தமும் பூஜை மலர்களும், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர்., நகர் ஊர் பொதுமக்கள், மறவர் சமுதாய இளைஞர் அணி,விழாக்குழுவினர் செய்திருந்தனர்.