பதிவு செய்த நாள்
22
செப்
2024
10:09
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு திருப்பாவாடை தளிகை சிறப்பு வழிபாடு நடந்தது.
நடுநாட்டு திருப்பதி, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக் கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜை, 06:45 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 8:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 11:00 மணிக்கு சிகப்பு கல்கி கிரீடம், மரகத கண்டி, மரகத பச்சை பதக்கம், அட்டிகை அணிந்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கதம்ப சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் படையலிடப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க திருப்பாவாடை தளிகையுடன் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. மூலவர் உலகளந்த பெருமாள் கல்பதித்த சங்கு சக்கரம், கர்ண பத்திரம், காசு மாலை, மாங்காய் மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சன்னதி வீதி புறப்பாடு, கண்ணாடி அருகில் ஊஞ்சல் சேவை, இரவு 9:00 மணிக்கு சுவாமி மூலஸ்தானம் எழுந்தள்ளினார். ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.