திருச்செந்தூரில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2024 01:09
திருச்செந்துார்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், தொடர் விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்செந்துாரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பொது தரிசன வழி, 100 ரூபாய் கட்டண தரிசன வழிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
போக்குவரத்து நெரிசல் ; திருச்செந்துார் கோயில் வளாகத்தில் ரூ. 200 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் நடப்பதால் கோயில் வளாகத்தில் போதிய இடவசதி இல்லாததால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். வரிசையில் சுவாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் குழந்தைகளுடன் காத்து நின்றனர். கோயில் வளாகத்திலும் நகரில் கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.