பதிவு செய்த நாள்
09
அக்
2024
03:10
சபரிமலை; சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் வசதி ரத்து செய்யப்பட்டதற்கு பந்தளம் அரண்மனை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எந்த முடிவையும் அரண்மனை ஏற்காது என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் கடந்த ஆண்டு மண்டல மகர விளக்கு சீசனில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் 20 முதல் 24 மணி நேரம் தண்ணீரும், உணவும் கிடைக்காமல் காட்டுக்குள் பக்தர்கள் சிக்கி தவித்தனர்.
ஆன்லைன் முன்பதிவுக்கு ஒரு லட்சம் பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஸ்பாட் புக்கிங் மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இதனால் சபரிமலையில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் அனைத்தும் தாறுமாறானது. ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்காமல் இருமுடி கட்டுகளை காடுகளிலேயே வைத்து விட்டு திரும்பி சென்ற சம்பவம் நடைபெற்றது. இதனால் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு அனுமதி வழங்கவும், ஸ்பாட் புக்கிங் வசதியை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சபரிமலையில் பக்தர்களை கூட்டத்தை குறைப்பதிலேயே பினராயி விஜயன் அரசு குறியாக இருப்பதாக காங்கிரஸ், பா.ஜ ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது.தற்போது இந்த முடிவுக்கு பந்தளம் அரண்மனையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களை கண்டுபிடித்து அதை தீர்ப்பதற்கு உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும். இதைத் தவிர்த்து பக்தர்கள் எண்ணிக்கையை குறைப்பதும், ஸ்பாட் புக்கிங் வசதியை நிறுத்துவதும் ஏற்க முடியாது. ஆன்லைன் முன்பதிவு 75 சதவீதமாகவும், ஸ்பாட் புக்கிங் 25 சதவீதமாகவும் இருக்க வேண்டும். எல்லா பக்தர்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது. இதனால் ஸ்பாட் புக்கிங் வசதி நிச்சயமாக இருக்க வேண்டும். பக்தர்களுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிரமத்தை ஏற்படுத்தும் எந்த முடிவையும் பந்தளம் அரண்மனை ஏற்காது என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.