பதிவு செய்த நாள்
26
அக்
2024
10:10
உடன்குடி; குலசேகரன்பட்டணம், முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா உண்டியல் மூலம், ரூ.4 கோடியே 57 லட்சம் வசூலானது. குலசை., முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, கடந்த அக். 3ம் தேதி துவங்கி அக். 12ம்தேதி வரை நடந்தது. துாத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர்,வேடம் அணிந்து கிராமம், கிராமமாகச் சென்று காணிக்கை பிரித்து, கடைசி நாளில் முத்தாரம்மன் கோயிலில் செலுத்தினர். இந்த காணிக்கைகளை, கடந்த 5 நாட்களாக எண்ணும் பணி நடந்து வந்தது. இதில், 18 நிரந்தர உண்டியல்களும், தசரா திருவிழாவிற்கு அமைக்கப்பட்ட 65 தற்காலிக உண்டியல்களும் எண்ணப்பட்டன. சங்கரநாராயணசுவாமி கோயில் துணை ஆணையர் மற்றும் செயல்அலுவலர் கோமதி, குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் தலைமையில், உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில், பக்தர்கள் காணிக்கையாக, 4 கோடியே 57 லட்சத்து 23ஆயிரத்து 30 ரூபாயும்,115 கிராம் 300 மிலி., தங்க பொருட்களும், 2,689 கிராம் 900 மிலி.,வெள்ளி பொருட்களும் கிடைத்துள்ளதாக, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தவிர, 15 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக, 46 லட்சத்து ஆயிரத்து 514 ரூபாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், ஆய்வர் பகவதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், அறங்காவலர்கள் மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் பொதுமக்கள், கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.