அனந்தமங்கலம் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2024 11:12
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் 3 கண்களையும், 10 கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் ஏந்தி, முதுகில் சிறகுகளோடு காட்சியளிக்கிறார். இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி உலகில் இங்கு மட்டுமே உள்ளது.
மேலும் தனிச்சிறப்பாக அனந்தமங்கலம் ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டது. ஆஞ்சநேயர் இலங்கையில் உள்ள அரக்கர்களை சம்ஹாரம் செய்து திரும்பும் வழியில் கடலோரம் இயற்கைச் சூழ்ந்த இடத்தில் இறங்கி ஆனந்தமாய் தங்கியிருந்த இடம்தான் இந்தத் தலம். அதனாலேயே இது ஆனந்தமங்கலம் என்றும் தற்போது மறுவி அனந்தமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புடைய கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி ஆஞ்சநேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து பால், இளநீர், சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடைகளால் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.