சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மேற்கு மாகாளியம்மன் கோவில் பழமையானது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கருவறை மற்றும் அர்த்த மண்டபம் கருங்கற்களினால் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேக விழா, கடந்த, 30 ம்தேதி திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. 31 ம்தேதி காலை, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், மாலை முளைப்பாலிகை மற்றும் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இரவு முதல் கால ஹோமம் நடந்தது. மறுநாள் விமான கலசம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை, நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து புனிதநீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 10:00 மணிக்கு, ஸ்ரீ மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.