மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2025 10:03
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி மயானகொள்ளை நிகழ்ச்சி நடந்தது. 5ம் நாள் விழாவாக நேற்று தீமிதி விழா நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கரம் செய்தனர். பகல் 2.30 மணிக்கு அக்னி குளத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை கோவில் முன்பு அமைத்திருந்த தீக்குண்டம் முன்பு ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது காப்பணிந்து விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தி, ஆகாய மார்கமாக அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். 3.15 மணிக்கு சேலம் மாவட்டம், ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமானந்தம் சுவாமிகள் தீக்குண்டம் இறங்கி தீமிதிப்பதை துவக்கி வைத்தார். தொடர்ந்து கோவில் பூசாரிகளும், தமிழகம் முழுவதும் இருந்து காப்பு அணிந்து விரதமிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இரவு 9 மணி வரை தீமிதித்தனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலை உதவி அணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் எஸ்.பி.சரவணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசாரும், மாவட்ட தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர்.