பதிவு செய்த நாள்
05
மார்
2025
12:03
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மாசி தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுாரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி மயானக் கொள்ளையும், 2ம் தேதி தீமிதி விழாவும் நடந்தது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை தேரில் எழுந்தருளச் செய்து, திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர். தொடர்ந்து, தானியங்கள், பழங்கள், காய்கறிகள், நாணயங்களை வாரி இறைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், தரணிவேந்தன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், சிவக்குமார், சிவா பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். எஸ்.பி., சரவணன் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.