பதிவு செய்த நாள்
07
மார்
2025
11:03
ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் மாசி மக உற்சவம் 23 நாட்கள் விமர்சையாக நடக்கும். இந்த ஆண்டு உற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மூலவர் பெருமாள்,அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. முக்கிய நிகழ்ச்சிகளாக நாளை (8ம் தேதி) இரவு தங்க கருட சேவை, 9ம் தேதி சேஷ வாகனம், 10ம் தேதி அனுமந்த வாகனம், 11ம் தேதி யானை வாகனத்திலும் சாமி வீதியுலா நடக்கிறது. 13ம் தேதி அதிகாலை ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து, கிள்ளை கடல் தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து சேத்தியாதோப்பு தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் உற்சவம், 14ம் தேதி காலை கிள்ளை கடற்கரையில் தீர்த்தவாரி நடக்கிறது. 15ம் தேதி நஞ்சமகத்துவாழ்க்கை மண்டகப்படி, 19ம் தேதி புவனகிரியில் வீதியுலா, 20ம் தேதி திருமஞ்சனம் நடக்கிறது. 21ம் தேதி குமாரகுடி, கானூர் வழியாக பாளையங்கோட்டை, ராமாபுரம் கிராமங்களில் உற்சவம் நடந்த பின்னர் 26ம் தேதி இரவு ஸ்ரீமுஷ்ணம் எல்லைக்கு சாமி வந்தருளுகிறார். 28ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் மாலா, செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.