பதிவு செய்த நாள்
08
மார்
2025
10:03
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நாளை, மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் நடைபெறுகிறது.
திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் மாசி பிரம்மோத்சவ விழா, முதல் நாள் நிகழ்ச்சியாக கடந்த 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி, கோவில் முன் இருந்த கொடிமரத்தில் கொடியேற்றினர். அன்று காலை தொட்டி உற்சவ வீதியுலாவும், இரவு கிளி வாகன வீதியுலாவும் நடைபெற்றன. இதையடுத்து, 4ம் தேதி காலை தொட்டி உற்சவமும், இரவு பூத வாகன வீதி உலாவும், 5ம் தேதி புருஷாமிருக உபதேச உற்சவமும், இரவு வெள்ளி அன்ன வாகன வீதி உலாவும், 6ம் தேதி ஆட்டுக்கிடா வாகன உற்சவமும், இரவு வெள்ளி மயில் வாகன வீதியுலாவும் நடைபெற்றன. நேற்று காலை மங்களகிரி உற்சவமும், இரவு தங்கமயில் வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடந்தது. இன்று பகல் தொட்டி உத்சவமும், இரவு யானை வாகன வீதியுலாவும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய விழாவான தேரோட்டம், நாளை 9ம் தேதி காலை 9:00 மணியளவில், தேரடியில் தொடங்கி, நான்கு மாடவீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியின் போது, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இரவு மங்கள சாசன உத்சவம் நடைபெற உள்ளது. வரும் 10ம் தேதி தொட்டி உற்சவமும், மாலை ஆலத்துார் கிராமத்தில் பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற உள்ளன. 11ம் தேதி விமான உத்சவமும், சிம்ம வாகனத்தில் ஆறுமுக சுவாமி அபிஷேகம் மற்றும் வீதியுலாவும், 12ம் தேதி காலை தொட்டி உற்சவமும் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு சரவண பொய்கையில் தீர்த்தவாரியும், இரவு 7:00 மணிக்கு தெப்ப உத்சவம் மற்றும் அன்று இரவு குதிரை வாகனத்தில் அவரோகனம், மவுன உத்சவமும், சண்டேஸ்வரர் உத்சவமும் நடைபெறுகின்றன. வரும் 13ம் தேதி மாலை கிரிவல உத்சவம், இரவு பந்தம்பரி உத்சவமும், 14ம் தேதி மாலை வேடர்பரி உற்சவமும் நடக்கிறது. 15ம் தேதி காலை 7:30 மணிக்கு வள்ளியை முருகப்பெருமான் மணம்புரியும் திருக்கல்யாண உத்சவமும், தங்க மயில் வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்று, பிரம்மோத்சவ விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.