பதிவு செய்த நாள்
10
மார்
2025
06:03
பாலக்காடு; கேரளா மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் மாசி மாத உற்சவம் யானைகள் ஓட்டத்துடன் துவங்கியது.
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக தேவஸ்தானத்துக்கு சொந்தமான, 38 யானைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று யானைகள் பங்கேற்ற யானையோட்டம் நிகழ்ச்சி நடந்தது. மஞ்சுளால் பகுதியில் துவங்கிய யானையோட்டத்தில் செந்தாமராக் ஷன், பாலு, தேவதாஸ் ஆகிய யானைகள் போட்டி போட்டு ஓடின. முதலில் ஓடிக்கொண்டிருந்த செந்தாமராக் ஷன் என்ற யானையை முந்தி தெற்கு கோபுரம் வாசல் வழியாக கோவிலுக்குள் விறு விறு என ஓடி நுழைந்த பாலு யானை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாலு என்ற யானை வெற்றி பெறுவது முதல் முறையாகும். இதையடுத்து, பாலு யானை சுற்றம்பலத்தை ஏழு முறை வலம் வந்து மூலவரை வணங்கி நின்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற யானைகளுக்கு "யானையூட்டு (உணவு வழங்குதல்) நிகழ்ச்சி நடந்தது. வரும், 10 நாட்கள் விழாவில், பாலு யானை மீது உற்சவர் அமர்ந்து பவனி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, காலையில் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, உற்சவமூர்த்தியை வழிபட்டனர்.