பதிவு செய்த நாள்
13
மார்
2025
03:03
விருதுநகர்; மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் படுக்கையில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை , பெளர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர் கோவிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு கடந்த 11 ம் தேதி முதல் 14ம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
இன்று மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு விருதுநகர், மதுரை , தேனி ,திண்டுக்கல், திருச்சி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோயில் அடிவாரப் பகுதியில் குவிந்தனர். பின்பு 6:30 மணிக்கு கோயில் அடிவாரத்தில் உள்ள கேட் திறக்கப்பட்டது . பின்னர் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 12 வரை மட்டுமே அனுமதி எனவும், கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை தினந்தோறும் பக்தர்கள் செல்லலாம் என தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும், கோயிலுக்கு பக்தர்கள் யாரும் தினமும் வருகை தந்து ஏமாற வேண்டாம் எனவும் ஏற்கனவே மாதந்தோறும் வழங்கப்பட்டுள்ள 8 நாட்கள் மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.