பதிவு செய்த நாள்
13
மார்
2025
04:03
திருமுக்கூடல்; பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியான, திருமுக்கூடல் பாலாற்றங்கரையில், அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலான இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், மாசிமக விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிமகத்தையொட்டி இன்று விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 11:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அப்பன் வெங்கடேச பெருமானுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பிற்பகல் 12:00 மணிக்கு, கோவிலில் இருந்து சக்கரத்தாழ்வார், மூன்று ஆறுகள் கூடும் அப்பகுதிக்கு மேள வாத்தியம் முழங்க வருகை தந்தார். அங்கு, சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஆற்றில் கூடியிருந்த ஏராளமான பக்தர்களும் நீரில் மூழ்கி புனித நீராடினர். இதில், திருமுக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.