பதிவு செய்த நாள்
14
மார்
2025
08:03
உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா, மானாம்பதி கிராமத்தில், பெரியநாயகி சமேத வானசுந்தரேசுவரர் கோவில் உள்ளது. முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக உத்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான, மாசி மக உத்சவ திருவிழா, நேற்று முன்தினம் தொடங்கியது. முன்னதாக, நேற்று முன்தினம், காலை 3:00 மணிக்கு, மூலவருக்கு நெய், பால், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், காலை 6:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது. தொடர்ந்து, நேற்று, அதிகாலை 1:00 மணிக்கு, மானாம்பதி கூட்டுச்சாலையில் உள்ள திருவிழா மண்டபத்தில், வானசுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டது. பின், அதிகாலை 4:00 மணிக்கு மானாம்பதி, பெருநகர், விசூர், சேர்ப்பாக்கம், தண்டரை, தேத்துறை, குறும்பூர், நெடுங்கல், இளநகர், மேல்மா, அத்தி, சேத்துப்பட்டு, இளநீர்க்குன்றம், கீழ்நீர்க்குன்றம், மானாம்பதி கூட்டுசாலை, மேல்பாக்கம், நெடுங்கல்புதுார், ஆளப்பிறந்தான்புதுார் ஆகிய 18 கிராம தெய்வங்கள், சிறப்பு அலங்காரத்துடன், ஒன்றாக சேர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தன. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.