பதிவு செய்த நாள்
15
மார்
2025
10:03
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி வரவேற்பு அளித்தனர்.
சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குத்துறையில், நேற்று நடந்த மாசி மகத்திருவிழாவில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு நேற்று தீர்த்தவாரி நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் பூவராக சுவாமி கிள்ளை தைக்கால் மாரியம்மன் கோவிலில் எழுந்தருளினார். நேற்று காலை அங்கு பூவராக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதனைதொடர்ந்து, கிள்ளை தைக்கால் சையத் ஷா ரஹமத்துல்லா தர்காவில், பாரம்பரிய முறைப்படி பூவராக சுவாமிக்கு, டிரஸ்டி சையத் சக்காப் தலைமையில், இந்து முறைப்படி, தாம்பூல தட்டில் பழம், 5 படி அரிசி, 501 ரூபாய், பட்டு சாத்தி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லீம்கள் வரவேற்பு அளித்தனர்.
பூவராக சுவாமி கோவில் ஆச்சாரியார்கள் தர்காவிற்கு சென்று, மாலை, நாட்டு சக்கரை, வத்தி உள்ளிட்டவைகளை டிரஸ்டி சையத் சக்காப்பிடம் வழங்கி, உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் ரவிந்திரன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். தர்கா டிரஸ்டி சையத் சக்காப் கூறுகையில், பூவராக சுவாமி மாசி மகத்திற்கு வரும்போது, முன்னோர்கள் வழக்கப்படி 7 தலை முறையாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
அதுபோல், அவர்கள் கொடுக்கும் நாட்டு சர்க்கரையை வைத்து பாத்தியா ஓதி பிரசாதம் வழங்கப்படும் என்றார்.