பதிவு செய்த நாள்
17
மார்
2025
12:03
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசிபெருந்திருவிழா தனி பெருமை படைத்ததாகும். இந்த விழாவானது கடந்த மார்ச் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மறுநாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து மாரியம்மன் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்கினர். தொடர்ந்து மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளி மின்ரதத்தில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடி வகையறாக்கள் எடுத்து வரப்படும்.நாளை (செவ்வாய்க்கிழமை) திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழாவையொட்டி காலையில் கழுகு மரம் ஊண்றப்படும். பின்னர் மாலையில் கழுகுமரம் ஏறிய பிறகு விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் வரிசையாக இறங்குவார்கள். அன்றிரவு கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்படும். மறுநாள் புதன்கிழமை காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட வண்ண பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி நகர்வலம் வரும். அங்குள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலுக்கு சென்று அம்மன் இருப்பிடம் சேரும்.இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்துசமய அறநிலைய துறை அதிகாரிகளும், திருக்கோயில் பூசாரிகளும், விழாக்குழுவினர்களும் செய்து வருகின்றனர். பொது சுகாதாரம், குடிநீர் வசதிகளை நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா மேற்பார்வையில் செயல் அலுவலர் விஜயநாத், துப்புரவு ஆய்வாளர் செல்விசித்ராமேரி உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் நத்தம் போலீசாரும் செய்து வருகின்றனர்.