பதிவு செய்த நாள்
18
மார்
2025
11:03
புதுக்கோட்டை; கார்க்கமலம் கிராமத்தில் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் கள ஆய்வில், ராஜராஜ சோழன் நிறுவிய சிவன் கோவில் கண்டறியப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த் துறை தலைவரான, தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் குழுவினர், மணமேல்குடி அருகே கார்க்கமலம் கிராமத்தில் நேற்று கள ஆய்வு செய்த போது, அங்கு இடிந்த நிலையில் சிவன் கோவில் ஒன்றை கண்டறிந்தனர்.
காளிதாஸ் கூறியதாவது: இது காந்தளூர் சாலை கலமருதருளிய ராஜகேசரி பன்மரான அருண்மொழிவர்மன் நிறுவிய மிழலை கூற்றத்துக் கார்க்கமலம் பொதுவுடையார் கோவில். ஆவுடையார்கோவில் அருகே ஒக்கூர் பெருமாள் கோவில் கல்வெட்டு ஒன்றில், ‘இவ்வூரின் கார்க்கமலம் தேவதச்சனார், நந்தா விளக்கு செய்து கொடுப்பதாக’ என, கல்வெட்டு செய்தி வருகிறது. இதன் அடிப்படையில், கார்க்கமலம் பொதுவுடையார் கோவிலானது, அரசியல் மாற்றங்களாலும், போர்க் காரணங்களாலும் தற்போது அழிந்த நிலையில், வழிபட ஆளின்றி கிடப்பதைக் காணலாம். இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களை பராமரிப்பதும், பாதுகாப்பதும் பொதுமக்கள் மற்றும் அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.