பதிவு செய்த நாள்
19
மார்
2025
05:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா, ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா கடந்த 4-ம் தேதி சக்தி கும்பஸ்தானத்துடன் துவங்கியது. இதையடுத்து, கோவிலில் பூவோடு வைக்கப்பட்டது. கொடுமுடி, பழநி, நல்லுாத்து, கூடுதுறை, தெய்வகுளம் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தினமும் மாலையில் புனித தீர்த்தங்கள் கொண்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று காலை 7:00 மணிக்கு, குண்டம் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு புறப்படுதல், இரவு 8:00 மணிக்கு அகத்துார் அம்மன் தீர்த்தம் கொண்டு வருதல், இரவு 9:00 மணிக்கு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. இன்று காலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாகாளியம்மன், குண்டத்து காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தனர். விரதம் இருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என, பக்தி கோஷம் எழுப்பியப்படி, குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்தல் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நாளை, அம்மன் ஊர்வலம், மஞ்சள் நீராடுதல், மகா அபிஷேகம், ஆராதனை பூஜைகள் நடைபெறுகிறது.