பதிவு செய்த நாள்
22
மார்
2025
11:03
திருப்பதி: திருமலை அடிவாரத்தில், தனியார் நிறுவனத்துக்காக மும்தாஜ் என்ற பெயரில் ஹோட்டல் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ரத்து செய்தார்.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கடும் எதிர்ப்பு; இதற்கு முன், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்தபோது, திருமலை அடிவாரத்தில் அலிபிரி அருகே, 35.32 ஏக்கர் பரப்பளவில் தனியார் நிறுவனத்துக்கு மும்தாஜ் ஹோட்டல் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. தங்கும் அறைகள் உள்ளிட்ட சொகுசு வசதிகளுடன் ஹோட்டல் கட்ட தீர்மானிக்கப்பட்டது.இதற்கு, திருப்பதி தேவஸ்தானம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், சைவ உணவு வகைகள் மட்டுமே விற்கப்படும் என, மும்தாஜ் ஹோட்டல் தரப்பு கூறியது. ஆட்சி மாற்றத்துக்கு பின், இது தொடர்பாகவும், தேவஸ்தானத்தில் ஹிந்து அல்லாதோர் பணிபுரிவது குறித்தும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு கடிதம் எழுதினார். இந்நிலையில், தன் பேரன் பிறந்த நாளையொட்டி தரிசனத்துக்காக, முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திருமலைக்கு வந்தார்.
தரிசனத்துக்கு பின், அவர் கூறியதாவது: திருப்பதியின் ஏழு மலைகளும் ஏழுமலையானுக்கே சொந்தம். அந்த மலைகள் புனிதமானவை. எனவே, முந்தைய ஆட்சியின் போது, அலிபிரி அருகே 35.32 ஏக்கரில் மும்தாஜ் ஹோட்டல் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது.
பணி இடமாற்றம்; திருப்பதியில் எந்த விதமான வர்த்தக நோக்கங்களுக்கும் இடம் கிடையாது. எந்தவொரு தனி நபருக்கும் அதற்கான அனுமதி கிடையாது. இதுபோல, திருப்பதி தேவஸ்தானம் மற்றும் கோவிலில் ஹிந்துக்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படுவர். ஹிந்துக்கள் அல்லாத ஊழியர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் வேறு இடங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்படுவர். நாடு முழுதும் அனைத்து மாநில தலைநகரிலும் வெங்கடேஸ்வரா கோவில்கள் கட்டப்படும். இதற்காக, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பப்படும். வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்களின் விருப்பத்துக்கேற்ப, அங்கும் கோவில்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருமாலின் பெருமை; கடந்த 2003-ல் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது, திருப்பதி அருகே அலிபிரியில் நக்சல்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி உயிர் பிழைத்தார். அந்த தாக்குதலை நேற்று நினைவு கூர்ந்த சந்திரபாபு நாயுடு, “24 கண்ணிவெடிகளில் சிக்கிய எவரும் உயிர் பிழைக்க முடியாது. ஆனால், அத்தகைய தாக்குதலில் சிக்கி உயிர் பிழைத்தேன். தற்போது நான் வாழ்வதில் இருந்தே, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் மிகப்பெரும் சக்தியை புரிந்து கொள்ளலாம்,” என்றார்.