காரமடை அரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவம் நிறைவு; ஏகாதிசி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2025 02:03
காரமடை; வைணவ தளங்களில் பிரசித்தி பெற்ற காரமடைஅரங்கநாத ஸ்வாமி கோவிலில் குரோதி வருட மாசி மக பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெற்றது. ஆஸ்தானம் எழுந்தருளி அரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 5ம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கி, ஆறாம் தேதி கொடியேற்றம் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், திருத்தேர் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து, குதிரை வாகனம், தெப்ப உற்சவம், சந்தான சேவை என நடைபெற்ற விழா வசந்த உற்சவத்துடன் நிறைவடைந்தது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி இருந்தார். கிருஷ்ண பக்ஷ ஏகாதிசியான இன்று 25ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை மூலவர் சிறப்பு திருமஞ்சனம் கால சந்தி பூஜை முடிந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதருக்கு மண்டபத்தில் விஷ்வக்சேனர் ஆராதனம் புண்யா வசனம் நவ கலச ஆவாஹனம் ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. அப்போது பஞ்ச சுக்தம் திவ்ய பிரபந்தத்தில் உள்ள நீராட்டம் பாசுரங்கள் சேவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீல நிறப் பட்டுடுத்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ரங்கநாதர் வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேள தாளம் முழங்க திருக்கோவில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். தொடர்ந்து உச்சகால பூஜை சாற்றுமுறை சேமிக்கப்பட்டு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் ஸ்தலத்தார்கள் வேத வியாச ஸ்ரீதர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி பாலாஜி அர்ச்சகர் திருவேங்கடம், ஐயங்கார் மிரா சுதாரர்கள் சரவணன், ஜெகநாதன், ஆனந்த், கிருஷ்ணன், உள்ளிட்டோரும் விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் திருக்கோவில் செயல் அலுவலர் ( கூடுதல் பொறுப்பு) பேபி ஷாலினி செய்திருந்தனர்.