மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் உள்ள, ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில், அக்னி கம்பம் நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோவிலில் கடந்த எட்டாம் தேதி, திருவிழா பூச்சாட்டு நடந்தது. நேற்று முன்தினம் இரவு, அக்னி கம்பம் நடப்பட்டது. பின்பு சிறப்பு பூஜை செய்தபின் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை மாலை திருவிளக்கு பூஜையும், 20ம் தேதி ராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில், கரகம், பூச்சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அன்று இரவு ராஜா மகா சக்தி வள்ளிக்கும்மி குழுவினரின் அரங்கேற்ற நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. 22ம் தேதி அம்மன் அழைப்பும், 23ம் தேதி சக்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதலும், மதியம் அலங்கார பூஜையும், மாவிளக்கு எடுத்தலும் நடைபெற உள்ளது. 24ம் தேதி மஞ்சள் நீராட்டும், 25ம் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.