பதிவு செய்த நாள்
26
ஏப்
2025
12:04
வில்லியனுார்; வில்லியனுார் பெருமாள் கோவிலில் ராமானுஜர் விழாவின் மூன்றாம் நாள் உற்சவம் நடந்தது.
வில்லியனுாரில் அமைந்துள்ள, பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் ராமானுஜர் உற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினசரி காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலையில் சுவாமி உள்புறப்பாடு நடந்து வருகிறது. மூன்றாம் நாள் உற்சவம் நேற்று நடந்தது. ராமானுஜருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில், உடையவர் என்று அழைக்கப்படும் ராமானுஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் உள்புறப்பாடு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன், உபயதாரர்கள், பட்டாச்சார்யார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.