பதிவு செய்த நாள்
19
மே
2025
10:05
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஏப்.,4ல் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஏப்., 29, 30 ஆகிய இரு நாட்களில் அரைமண்டலமாக கருதப்பட்டு சிறப்பு மண்டல பூஜை நடந்தது.
அதனைத் தொடர்ந்து 45 நாட்கள் நிறைவை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு மங்களநாதர் சுவாமி கோயில் வடக்கு பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உற்ஸவ மூர்த்திகளான மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு யாக வேள்வி வளர்க்கப்பட்டது. குடங்களில் புனித நீர் பூஜிக்கப்பட்டு மூலவர்கள் மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன், சகஸ்ரலிங்கம், மரகத நடராஜர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாரதனைகள் நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை கோயில் ஸ்தானிக குருக்கள் செய்திருந்தனர். ராமநாதபுரம் சேதுபதி ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் மற்றும் திவான் பழனிவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமான சிவனடியார்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.