இன்று தேய்பிறை அஷ்டமி விரதம்; பைரவரை வழிபட கஷ்டம், கடன்தொல்லை நீங்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2025 10:05
தேய்பிறை அஷ்டமி கால பைரவரை வழிபட சிறந்த நாள். பெரிய சிவாலயங்களில் காலபைரவர் சந்நிதி இருக்கும். இவரே சிவன்கோயில் காவல் தெய்வமாவார். சில ஊர்களில் தனிக் கோயிலும் உண்டு. வில்வம், செம்பருத்தி, தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உளுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை ஆகியவை இவருக்குரிய நைவேத்யம். எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர்.
துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி வருவது மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. பைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபட எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். இன்று வீ்ட்டில் சொர்ணாகர்ஷண பைரவருக்கு விளக்கேற்றி வழிபட செல்வ செழிப்பு ஏற்படும்.