பதிவு செய்த நாள்
23
மே
2025
10:05
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, பாதுகாப்பு கவசம் அமைக்க, பில்லர்களுக்கு கான்கிரீட் போடும் பணிகள் நடைபெறுகின்றன.
கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். மிகவும் பழமையான இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத் தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர். தேர் திருவிழா முடிந்த பின், தேருக்கு பாதுகாப்பு கவசம் தகரத்தாள் அமைக்கப்படும். பல ஆண்டுகள் பயன்படுத்திய தகரம் என்பதால், துருப்பிடித்திருந்தது. மழை பெய்யும் போது தண்ணீர் தேரின் உள்ளே சென்றது. அதனால் இந்த ஆண்டு தேருக்கு புதிதாக பாதுகாப்பு கவசம் அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக நான்கு பக்கமும் நில மட்டம் வரை கான்கிரீட் பில்லர்கள் அமைக்கப்படும். அதற்கு மேல் 30 அடி உயரத்தில் இரும்பு ஆங்கில் நான்கு பக்கமும் அமைக்கப்படும். தேருக்கு மேலேயும், கீழேயும் சுற்றியும் ஜிங் சீட்டால் கவசம் அமைக்கப்படும். இடையில் பிளாஸ்டிக் கண்ணாடி சீட்டால் கவசம் அமைக்கப்பட உள்ளது. தற்போது தேருக்கு பாதுகாப்பு கவசம் அமைக்க, நான்கு பக்கம் உள்ள பில்லர்களுக்கு கான்கிரீட் போடும் பணிகள் நடைபெறுகின்றன.