திருத்தணி; திருத்தணி அடுத்த மேல்திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை – மாலை நேரங்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்து வருகிறது. நேற்று காலை 9:30 மணிக்கு அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதில், அர்ஜுனன் முனிவர் வேடமணிந்து, பனை மரத்தில் தவம் செய்யும் காட்சியை நாடக கலைஞர்கள் தத்துரூபமாக நடித்து காண்பித்தனர். வரும் 1ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி விழாவும் நடைபெறும்.