பதிவு செய்த நாள்
28
மே
2025
11:05
மதுரை; தமிழகம் முழுதும் உள்ள அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும், மதுரையில் குன்றம் காக்க... கோவிலை காக்க என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து முன்னணி சார்பில் ஜூன் 22ம் தேதி நடக்கவுள்ளது. அதற்கான அடிக்கல் பூமி பூஜை மதுரை வண்டியூரில் இன்று நடந்தது. தொடக்கத்தில் கோ பூஜை நடந்தது. விழாவில் அமைக்கப்பட்ட மாநாடு கட்டமைப்பின் மாதிரியை பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் பார்வையிட்டு, நிகழ்வின் அமைப்பை கேட்டறிந்தனர். பின்னர் 6:58 மணிக்கு தொடங்கிய பூமி பூஜையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கிடையாது, முழுவதும் பக்தர்களுக்காக நடத்தப்படும் மாநாடு என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது; தமிழ் கடவுள் முருகனுக்கு நடைபெறும் மாநாட்டில் ஒரு வாரம் முன்பு அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே அரசு ஒரு மாநாடு நடத்தியது. ஆனால் இந்த மாநாடு முழுமையான பக்தி உள்ள மாநாடாக அமையும். மலேசியா, சிங்கப்பூரில் இருந்து பக்தர்கள் வருவர். இது முழுக்க முழுக்க பக்தி மாநாடு. இதில் அரசியல் கிடையாது. பக்தர்களுக்காக நடத்தப்படுகிறது என்றார்.