நயினார்கோவில் வைகாசி வசந்த விழாவிற்கு ஆயத்தமாகும் தேர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2025 11:05
நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவிற்கு சுவாமி தேர் தயாராகும் நிலையில் இன்று கொடி ஏற்றப்பட உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட நயினார்கோவில் சவுந்தரநாயகி, நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு வைகாசி வசந்த உற்ஸவ விழா ஆண்டுதோறும் நடக்கிறது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்புகள் பெற்ற கோயில் முன்பு வாசுகி தீர்த்த குளம் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் ஆண்டு முழுவதும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வருகின்றனர். இதன்படி குழந்தை பேறு வேண்டுவோர் வேண்டுதலை நிறைவேற்ற கோயிலில் குழந்தையை விட்டு ஏலம் எடுக்கும் முறை இன்றளவும் உள்ளது. மேலும் இப்பகுதியில் விளையும் அனைத்து வகையான தானியங்கள், காய்கறிகளையும் நாகநாதருக்கு பங்கை செலுத்துவது வழக்கம். தொடர்ந்து கோயிலில் இன்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு வைகாசி வசந்த விழா துவங்க உள்ளது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வலம் வருகிறார். மேலும் முக்கிய விழாவாக ஜூன் 8ல் தேரோட்டம் நடக்க உள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகள் துவங்கி நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை தர்மகர்த்தா, சரக பொறுப்பாளர் செய்து வருகின்றனர்.